(TM)கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தர் அழகியல் கற்கை நிறுவனத்தில் சித்தி பெற்றவர்களுக்கு வழங்கப்படும் டிப்ளோமா சான்றிதழானது பல்கலைக்கழகங்களின் பட்டச் சான்றிதழுக்கு சமமானது அல்ல என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் இந்த தீர்மானம் சுவாமி விபுலானந்தர் அழகியல் கற்கை நிறுவனத்தில் டிப்ளோமா சான்றிதழ்கள் பெற்றவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே இசை மற்றும் நடனம் உட்பட அழகியல் கல்வி ஆசிரியர்களில் சுவாமி விபுலானந்தர் அழகியல் கற்கை நிறுவனத்தில் 4 வருட டிப்ளோமா கற்கை நெறியைப் பூர்த்தி செய்தவர்கள் கல்வி அமைச்சின் 2009/27 இலக்கமும் 12.08.2009 திகதியிடப்பட்ட சுற்று நிருபத்தின் பிரகாரம் பட்டதாரி ஆசிரியர்களாக உள்ளீர்ப்பு செய்யப்பட்டுள்ளவர்களாவர்.
20.04.1998 தொடக்கம் சுவாமி விபுலானந்தர் அழகியல் கற்கை நெறி டிப்ளோமா சான்றிதழ் பெற்றிருந்த ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக இறுதியாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் உள்ளீர்ப்பு செய்யப்பட்டிருந்தனர்.
குறித்த பட்டதாரி ஆசிரியர் நியமனம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் மேலதிக செயலாளரின் அறிவித்தல் காரணமாகவே இது ரத்துச் செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு மேலதிக கொடுப்பனவுகள் வழங்கப்பட்டிருந்தால் அது மீள அறவிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment