இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

5/20/2013

இலங்கை அனைத்து இன மக்களுக்கும் சொந்தமான நாடு : SLTJ

பொது பல சேனாவின் கருத்துக்கு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் பதிலடி.
பொது பல சேனா கடந்த வியாழக்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் “இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமான நாடு என்பதை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு இங்கு இடமில்லை. அவ்வாறானவர்கள் இங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டுமென தெரிவித்தது”.
இலங்கையில் இயங்கும் சர்வ மத அமைப்புக்களை தடைசெய்ய வேண்டும். இவ் அமைப்புக்கள் சிங்கள பௌத்தர்களை அழிக்கும் நிகழ்ச்சி நிரலையே முன்னெடுக்கின்றன என்றும் அவ் அமைப்பு தெரிவித்தது.
இலங்கை நாட்டின் நவீன பிரிவினைவாதிகள் பொது பல சேனாவும் அதன் அமைப்பாளர்களும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. நாட்டில் சுபீட்சத்தை கட்டியெழுப்பி, இலங்கையில் அபிவிருத்திக்கு அனைத்து மக்களும் பங்காற்றிக் கொண்டிருக்கும் இவ்வேலையில் பிரிவினைவாதத்தைத் தூண்டும் விதமாக பொது பல சேனாவின் செயலாளர் ஞானசார தேரர் தனது கருத்துக்களை வெளியிட்டு வருவது மிகவும் கண்டிக்கத் தக்கதாகும்.
யுத்தத்திற்கு பின்னரான இலங்கையில் நாட்டு மக்கள் அத்தனை பேரும் ஜாதி, மத, இன வேறுபாடுகளின்றி நிம்மதியாக அவரவர் அவரவரின் மத அடிப்படையில் வாழ்ந்துவரும் இவ்வேலையில் மதங்களுக்கும், இனங்களுக்கும் மத்தியில் பேதத்தை வளர்க்கத் துடிக்கும் பொது பல சேனாவை அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும்.
இலங்கையில் இயங்கும் சர்வ மத அமைப்புகள் பௌத்தர்களை அழிக்கும் நிகழ்ச்சி நிரலையே முன்னெடுப்பதாகவும் அதனால் அவ்வமைப்புகளை தடை செய்ய வேண்டும் என்றும் பொது பல சேனா தெரிவிக்கின்றது. உண்மையில் பௌத்தர்களுக்கும், பௌத்த தர்மத்திற்கும் எதிரான செயல்பாடுகளில் ஈடுபட்டு வரும் பொது பல சேனா அமைப்பு தான் உண்மையில் தடை செய்யப்பட வேண்டிய ஒன்றாகும். ஒற்றுமையை சீர்குலைத்து அப்பாவி பௌத்த மக்களை அழிவுப் பாதைக்கு அழைக்கும் நிகழ்ச்சி நிரலையே இவ்வமைப்பு கொண்டுள்ளது. இது போன்ற அமைப்புகள் இலங்கை போன்ற சுபிட்சமும், ஒற்றுமை சகவாசமும் கொண்ட நாடுகளில் செயல்படுவது நாட்டின் ஆரோக்கியத்திற்கு எதிரான புற்று நோயாகும்.
மனித உரிமைகளை பரிக்க முயலும் பொது பல சேனா தடை செய்யப்பட வேண்டும்.
அனைத்துலக மனித உரிமைகள் (Universal Declaration of Human Rights) பிரகடனம் ஐக்கிய நாடுகள் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டது. டிசம்பர் 10, 1948-ஆம் ஆண்டு பிரான்ஸின் தலைநகரான பாரிஸில் உள்ள “பலேடு சாயிலோற்’ என்ற மண்டபத்தில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபை இந்தப் பிரகடனத்திற்கு 58 நாடுகள் அங்கீகாரம் வழங்கியது. அதில் 18ம் ஷர்த்தில் கீழ் உள்ளவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
  1. சிந்தனைச் சுதந்திரம், மனச்சாட்சிச் சுதந்திரம், மதச் சுதந்திரம் ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு. கருத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம் எவருக்கும் உண்டு. எவ்வழிவகைகள் மூலமும், எல்லைகள் இன்றி தகவலையும் கருத்துக்களையும் நாடுவதற்கும், பெறுவதற்கும் பரப்புவதற்குமான சுதந்திரம்.
இதே கருத்தை நமது நாட்டின் அரசியல் யாப்பும் 10 மற்றும் 14 (1) (ஈ) வது ஷர்த்தாக உள்வாங்கியுள்ள நிலையில் இவை அனைத்துக்கும் முரணாக ஏணைய மத அனுஷ்டானங்கள் இலங்கையில் செயற்படுத்த முடியாது என்று கூறியிருப்பது ஞானசார தேரரின் தீவிரபோக்கையும் அறியாமையும் துவேஷத்தையும் தெளிவாக படம் பிடித்துக் காட்டுகிறது.
இலங்கை அரசியல் யாப்பில் 09வது ஷர்த்தில் புத்த மதத்திற்கு முன்உரிமை வழங்கி அதை பாதுகாப்பதும் வளர்ப்பதும் இந்நாட்டின் அரசின் கடமை என்று குறிப்பிட்டிருப்பது உண்மை தான் அதற்காக ஏனைய மதத்வர்கள் இலங்கையில் மத அனுஷ்டானங்கள் செய்யக் கூடாது என்று சொல்வது மிகப் பெரிய மடமையாகும். ஏனனில் அதே ஷரத்தில் ஏனைய மதங்களுக்கு 10 வது மற்றும் 14 (1) (ஈ) குறிப்பிடப்பட்டுள்ள மதச் சுதந்திரத்தை பாதுகாப்பதும் அரசின் கடமை என்பது குறிப்பிட்டுள்ளதை பொது பல சேனா வேண்டுமென்றே புறக்கனிப்பதன் மூலம் அவர்கள் மதத் தீவிரவாதிகள் என்பதை  அவர்களே ஒப்புக் கொண்டுள்ளனர்.
விடுதலைப் புலிகள் வெற்றி கொள்ளப்பட்ட நாளிலிருந்து இன்று வரைக்கும் இந்நாட்டை ஆட்சி செய்துவரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெளிவாக குறிப்பிடும் ஒரு செய்திதான் “இந்த நாடு அனைவருக்கும் சொந்தமான நாடு” “இது எமது நாடு” “இதனை நாம் தான் கட்டியெழுப்ப வேண்டும்” இது போன்ற பல வாசகங்கள் அடங்கிய செய்திகளை ஜனாதிபதியவர்கள் தெளிவாக குறிப்பிட்டு இந்நாடு அனைவருக்கும் சொந்தமான நாடு என்பதை தெளிவுபடுத்தியிருக்கும் போது, மைக் கிடைத்துவிட்டால் முன்னர் நடந்த அனைத்தையும் மறந்துவிட்டு பேசும் பொது பல சேனாவின் செயலாளர் ஞானசார தேரரின் கருத்துக்களுக்கு யாரும் மதிப்பளிக்க வேண்டிய அவசியம் கிடையாது என்பதை தெளிவாக குறிப்பிடுகின்றோம்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா