சில மாதங்களுக்கு முன்னர் வெளிவந்த ‘கும்கி’ தமிழ் திரைப்படத்தை உங்களில் சிலர் பார்த்திருக்கக் கூடும். இந்தியாவின் விவசாயக் கிராமம் ஒன்றை யானையின் தாக்குதலிலிருந்து பாதுகாப்பதற்கு மற்றுமொரு யானையைக் கொண்டு வந்து எடுக்கப்படும் முயற்சிகளை மையமாகக் கொண்டதாக அந்தப் படத்தின் கதை அமைந்திருந்தது.
குறித்த கிராமத்தின் அறுவடைக் காலத்தில் அங்கு வரும் ‘கொம்பன்’என்றழைக்கப்படும் பாரிய யானையானது பயிர்களைத் துவம்சம் செய்து அந்தக் கிராமத்தையே நாசப்படுத்துவது வழக்கம். குறித்த கொம்பன் யானையிடமிருந்து கிராமத்தையும் விவசாய செய்கைகளையும் பாதுகாக்கும் பொருட்டு வெளியிலிருந்து பணம் செலுத்தி அழைத்துவரப்படும் யானையின் பெயரே ‘கும்கி’ என்பதாகும்.
கொம்பன் யானையிடமிருந்து அந்தக் கிராமத்தைப் பாதுகாக்கும் விடயத்தில் அதிகாரிகள் அசமந்தமாகச் செயற்பட்டதையடுத்து அக் கிராமத்தின் தலைவர்கள் தமக்கான நம்பிக்கைமிகுந்த பாதுகாவலராக ‘கும்கி’ யானையை கருதுவதும் ஈற்றில் கொம்பன் யானையைக் கொன்றுவிட்டு ‘கும்கி’ செத்துமடிவதும் கண்ணீரை வரவழைக்கும் காட்சிகளாகும்.
இந்தத் திரைப்படத்தின் கதையோட்டத்திற்கும் சம்மாந்துறை நகரில் இப்போது நடக்கும் யானையின் அட்டகாசங்களுக்குமிடையில் பெரியதொரு வித்திசாயமிருப்பதாகத் தெரியவில்லை.
சம்மாந்துறை நகருக்குள் கடந்த சில நாட்களாக நுழைந்து இரவு வேளைகளில் யானை ஒன்று செய்யும் அட்டகாசம் இன்று அந்த ஊரையே கிலி கொள்ளச் செய்திருக்கிறது. அன்று ‘புலிகளால்’ நிம்மதியிழந்தோம். இன்று ‘யானைகளால்’ நிம்மதியிழக்க வேண்டி வந்திருக்கிறது என அங்கலாய்க்கிறார்கள் சம்மாந்துறை மக்கள்.
சம்மாந்துறையில் மக்கள் மிகச் செறிவாக வாழும் லேக் வீதி, அலவக்கரை பிரதேசம், வைத்தியசாலை வீதி, பொலிஸ் வீதி, மத்திய கல்லூரி சுற்றுவட்டம் ஆகிய இடங்களே யானையின் தாக்குதலுக்கு இலக்கான முஸ்லிம் பகுதிகளாகும். அதேபோன்று தமிழ் மக்கள் வாழும் கோரக்கோவில் பிரதேசமும் யானையின் தாக்குதலுக்கு இலக்கான மற்றொரு பகுதியாகும்.
யானையின் தாக்குதலுக்கு இலக்கான வீடு ஒன்றின் சொந்தக்காரரான ஸஹீத் தனது அனுபவத்தை இப்படி விபரிக்கிறார்.
“ அன்று செவ்வாய்க்கிழமை இரவு 1.50 இருக்கும். எனது மனைவிதான் என்னைத் தட்டி எழுப்பினார். வீட்டுக்கு வெளியே பெரும் சப்தம் கேட்டது. சம்மாந்துறையில் இப்போது கள்வர்களின் நடமாட்டம் அதிகம். களவெடுக்க வந்தவர்கள்தான் ஏதோ செய்கிறார்கள் என நினைத்துக் கொண்டு வெளி விளக்கைப் போட்டுவிட்டு கதவு நிலை ஓட்டைக்குள்ளால் எட்டிப் பார்த்தேன். மிகப் பெரிய கறுத்த உருவம் ஒன்று எனது வீட்டைப் பார்த்தவாறு நின்றிருந்தது. அது யானைதான் என்பதை உணர்ந்து கொள்ள எனக்கு அதிக நேரம் எடுக்கவில்லை.
நான் பிறந்தது முதலே விவசாயத்தோடு தொடர்புடையவன் என்ற வகையில் வயலுக்கு யானைகள் வருவதும் அவற்றைத் துரத்துவதும் எனக்குப் பழக்கப்பட்ட விடயங்கள். இப்படி எத்தனையோ யானைகளைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இப்படிப்பட்ட பாரிய யானை ஒன்றை நான் பார்த்ததே கிடையாது.
எனது வீட்டின் முன்பக்க கடை அறையில் அறுவடை செய்த நெல்களை களஞ்சியப்படுத்தியிருந்தேன். அதன் வாசத்தை அறிந்தே எனது வீட்டை நோக்கி யானை வந்திருக்கிறது. ஆனாலும் நெல் இருந்த அறையை நோக்கிச் செல்லாது வீட்டின் முன்புறத்தையே அது தாக்கியது.
நான் உடனடியாக “நீ ஏன் எங்களுக்கு அநியாயம் செய்கிறாய்? நாங்கள் உனக்கு ஒன்றும் செய்யவில்லையே? அல்லாஹ்வுக்காக நீ போய்விடு” என்று சப்தமாகச் சொன்னேன்.
உடனடியாக அது பின்னோக்கி நகர்ந்தது. அதன் பிறகு ஒன்றுமே செய்யவில்லை. வந்த வழியால் போய்விட்டது” என்றார்.
யானைக்கு தமிழ் தெரியுமா என்று அவரிடம் நகைச்சுவையாகக் கேட்டேன். “ எனது அனுபவத்தில் சொல்கிறேன். மனிதர்கள் கதைப்பதை விளங்கிக் கொள்ளக் கூடிய கேள்வி ஞானம் யானைக்கு இருக்கிறது. சில நூறு மீற்றர் தூரத்தில் நின்று நாம் மெதுவாகக் கதைப்பதைக் கூட யானை காதுதாழ்த்திக் கேட்கும் ஆற்றல் கொண்டது. நாம் அதனை வெறுப்பூட்டும் வகையில் ஏதேனும் வார்த்தைகளைக் கூறினால் அடுத்த கணம் அதற்குக் கோபம் வந்துவிடும். பின்னர் நடப்பதே வேறு” என்கிறார் சஹீத்.
நாம் அங்கு சென்ற போது யானையின் தாக்குதலில் சேதமடைந்த தனது வீட்டின் முன்புறச் சுவரை சொந்தப் பணத்தில் சயீத் மீள நிர்மாணித்துக் கொண்டிருந்தார். அதிகாரிகள் எந்தவிதமான ஆக்கபூர்வமாக நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. பொலிசில் முறைப்பாடு செய்திருக்கிறோம். கிராம சேவை அதிகாரியும் வந்து சேதங்களைப் பார்வையிட்டுச் சென்றார். வன இலாகாத் திணைக்களத்திலும் இதுபற்றி முறைப்பாடு செய்திருக்கிறோம். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. நஷ்டயீடு கிடைக்குமா? கிடைக்காதா? என்று கூடத் தெரியாது என்றும் சஹீத் கூறுகிறார்.
சேதங்கள் ஒருபுறம் இருக்க, எமது உயிருக்கு உத்தரவாதம் வேண்டும் என்கிறார் சஹீதின் மனைவி மும்தாஜ் பேகம். சமுர்த்தி உத்தியோகத்தரான இவர், இரவில் குழந்தைகளோடு நிம்மதியாகத் தூங்க முடியாத அச்சநிலை ஏற்பட்டிருப்பதாகக் கூறுகிறார். எங்கு, எந்த நேரத்தில், எப்படி யானை வரும் என்று யாருக்குமே தெரியாது. இந்தப் பகுதி முழுக்கவும் மக்கள் அச்சத்தோடுதான் இராப் பொழுதைக் கழிக்க வேண்டியிருக்கிறது. இந்த அச்சத்தைப் போக்கவும் யானையின் வரவைத் தடுத்து நிறுத்தவும் அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுக்கிறார்.
யானையின் தாக்குதலுக்கு இரண்டு தடவைகள் இலக்கான வீட்டின் உரிமையாளரான ஓய்வு பெற்ற ஆசிரியர் அலி அஹமட் தனது அனுபவத்தை இப்படிக் கூறுகிறார்.
“ சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு வழக்கம்போல எழுந்து தஹஜ்ஜத் தொழ தயாராகிக் கொண்டிருந்தேன். குளிர் காற்று வரட்டும் என்பதற்காக தினமும் வீட்டு ஜன்னல் ஒன்றைத் திறந்துவிடுவது வழக்கம். அன்றும் அப்படித்தான். ஜன்னலைத் திறந்தவுடன் மீண்டும் அதே வேகத்தில் ஜன்னல் வந்து மூடிக் கொண்டது. காற்றுப் பலமாக வீசாத நிலையில் யாரோ ஒருவர் வெளியில் நின்று ஜன்னலை மூடிவிடுகிறார் என நான் நினைத்துக் கொண்டேன்.
ஊரில் கள்வர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ள காலம் என்பதால் இது கள்வனின் வேலைதான் என ஊகித்துக் கொண்டு நான் தொழுது பிரார்த்தனையில் ஈடுபட்டேன். விடிந்ததும் வெளியில் போய்ப்பார்த்த போதுதான் வந்தது கள்வன் அல்ல...யானைதான் என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.
வீட்டின் நெல் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த அறையை உடைத்து அங்கிருந்த ஒரு நெல் மூடையை தூக்கி எடுத்து அதில் அரைவாசியைச் சாப்பிட்டிருந்தது.” என்றார்.
நெல்லைச் சாப்பிடத்தான் யானை வருகிறது என்பது உறுதியாகத் தெரிந்தால் அன்றைய தினமே சகல நெல் மூட்டைகளையும் வேறு இடத்துக்கு மாற்றிவிட்டார் அலி அஹமட் சேர்.
“ எங்கள் வீட்டுக்கு மட்டும்தான் யானை இரண்டு தினங்கள் வந்தது. மீண்டும் மறுநாள் ஞாயிற்றுக்கிழமையும் வந்து நெல் இருக்கிறதா எனத் தேடிப் பார்த்திருக்கிறது. தான் தேடி வந்தது கிடைக்கவில்லை என்ற ஏமாற்றத்தினால் வீட்டின் முன்புறச் சுவரை இடித்துவிட்டு பின்புறமாக நின்ற பப்பாசி மரத்தை பிடுங்கி எறிந்துவிட்டுச் சென்றிருந்தது.
யானை வரலாம் என்ற அச்சத்தினால் நாங்கள் ஞாயிரன்று இரவு வீட்டில் தங்கவில்லை. மனைவி, பிள்ளைகளை அழைத்துக் கொண்டு உறவினரின் வீட்டுக்குச் சென்றுவிட்டேன். அன்றுதான் மீண்டும் வந்து கைவரிசையைக் காட்டியிருக்கிறது என்கிறார் அவர்.
“ அன்று விடுதலைப் புலிகள் ஊருக்குள் நுழைந்து இப்படித்தான் அட்டகாசம் புரிந்தார்கள். பணம், பொருட்களைக் கேட்டார்கள். ஆட்களை அழைத்துச் சென்று சுட்டார்கள். அதனால் இரவுகளில் தூக்கத்தைத் தொலைத்து நிம்மதியிழந்து தவித்தோம். இன்று யானைகள் ஊருக்குள் வந்து அட்டகாசம் புரிகின்றன. வீடுகளை உடைக்கின்றன. அல்லாஹ்வின் அருளால் மனிதர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. உயிர்களுக்கு ஏதம் நடந்தால் யார் பொறுப்புக் கூறுவது? யானைகளின் அட்டகாசத்திலிருந்து ஊரையும் மக்களையும் பாதுகாப்பதற்கு எந்தவித ஆக்கப+ர்வ நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை” என்றும் அவர் மேலும் கூறுகிறார்.
யானையின் வருகையால் சிறுவர்கள் கூட அச்சத்தில் இருக்கிறார்கள். “ அன்று அதிகாலை 3.30 மணியிருக்கும். எங்கள் வீட்டில் நிற்கும் இரண்டு மாடுகளும் வழமைக்கு மாறாகக் கத்தத் தொடங்கின. வெளியில் ஏதோ உடைக்கப்படும் சப்தம் கேட்டது. எனது நானா டோச் லைட்டை எடுத்துக் கொண்டு வெளியில் போகப் பார்த்தார். உம்மா போக வேண்டாம் என்றார். ஜன்னலுக்குள்ளால் பார்த்த போது எங்கள் வீட்டுக் கதவுக்குள்ளால் உள்ளே வர முடியாதவாறு பெரிய யானை ஒன்று நின்று கொண்டிருப்பதைக் கண்டோம். யானை வீட்டு வளவுக்குள் வர முயன்றதால் கதவுடன் இணைந்திருந்த சுவர் இடிந்துவிட்டது. “போ...போ…அல்லாஹ்வுக்காக போய் விடு” என்று எங்கள் உம்மா யானையைப் பார்த்துச் சொன்னார். அது போய்விட்டது. போகும் வழியில் எமது மாமியின் வீட்டில் விறாந்தையில் அடுக்கப்பட்டிருந்த நெல் மூட்டை ஒன்றையைத் தூக்கி ஒழுங்கைக்குள் போட்டுச் சாப்பிட்டுவிட்டுப் போயிருந்தது” என யானையைக் கண்ட தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார் 14 வயதான அக்ரம் எனும் சிறுவர்.
யானையை நேரில் கண்ட தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவரான ரிப்கான் தனது அனுபவத்தை இப்படிச் சொன்னார். “இரவு 1 மணியைத் தாண்டிய வேளை. பல்கலைக்கழக பயிற்சி வேலைகளை முடித்துக் கொண்டு தூங்கத் தயாரானபோது வீதியில் நாய் குரைக்கும் சப்தம் பலமாகக் கேட்டது. வழமைக்குமாறாகவே நாய் குரைத்தது. கள்வர்கள் வந்துவிட்டார்களோ என நினைத்து வெளி விளக்கைப் போட்டுப் பார்த்தபோது யாரையும் காணவில்லை. ஜன்னல் கதவைத் திறந்தவுடன் முன்னால் பெரிய உருவம் ஒன்று வந்து நின்றது. பார்த்தால் யானை. நாம் வீட்டுக்குள் நின்று ஜன்னல் கம்பிகளுக்குள்ளால் யானையைப் பார்த்து போய்விடு…அல்லாஹ்வுக்காக போய்விடு என்று சொன்னோம். அது தனது தும்பிக்கையை உயர்த்தி எம்மை நோக்கி சைகை செய்துவிட்டு பின்வாங்கிப் போய்விட்டது. உடனடியாக பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்தோம். ஆனால் அவர்கள் காலையில் 10 மணிக்குத்தான் வந்தார்கள்.” என்றார்.
இப்படி யானையின் தொடர்ச்சியான அட்டகாசத்தினால் சம்மாந்துறைப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்;டுள்ளன. சம்மாந்துறை மக்கள் அச்சத்தில் வாழ்கிறார்கள். வயல் பிரதேசங்களில் வழக்கமாக யானைகளின் அட்டகாசம் இருப்பினும் இப்படி ஊருக்குள் நுழந்து மக்களுக்கு அச்சுறுத்தல் விடுப்பது வரலாற்றில் இதுவே முதல் தடவை என மக்கள் கூறுகிறார்கள்.
இவ்வளவு நடந்தும் யானையிடமிருந்து சம்மாந்துறை மக்களுக்கு பாதுகாப்பைப் பெற்றுக் கொடுப்பதற்hன எந்தவித நடவடிக்கைகளும் அரசியல்வாதிகளாலோ சம்பந்தப்பட்ட அதிகாரிகளாலோ மேற்கொள்ளப்படவில்லை.
யானையின் தாக்கதலுக்கு இலக்கான இடங்களை பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் எவரும் சென்று பார்வையிடவோ இன்றேல் உரிய நஷ்டயீடுகளைப் பெற்றுக் கொடுக்கவோ முன்வரவில்லை.
பொது மக்களின் வீடுகள் சேதமாக் கப்பட்டிருக்கின்றன. வைத்தியசாலை, சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், சம்மாந்துறை மத்திய கல்லூரி ஆகிய பொது நிறுவனங்களின் சுவர்களும் யானையால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. பயிர்கள் நாசம் செய்யப்பட்டுள்ளன. அவற்றுக்கு நஷ்டயீடுகள் வழங்கப்பட வேண்டும். பாதிப்புகள் சீர்செய்யப்பட வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக மீண்டும் யானை ஊருக்குள் நுழைந்து அட்டகாசம் புரியாதவாறு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண் டும்.
இன்றேல் மேலே குறிப்பிட்ட திரைப் படத்தின் கதை போல சம்மாந்துறை மக்களும் பணம் செலுத்தி ஒரு ‘கும்கி’ யானையை வரவழைத்து அட்டகாசம் செய்யும் இந்த யானையை அடித்துவிரட்ட வேண்டி வரலாம்.
Thanks To Vidivelli
0 comments:
Post a Comment