டெல்லியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவ
மாணவிக்கு அமெரிக்கா அரசின் சர்வதேச வீர மங்கை விருது வழங்கப்பட்டது. இந்த
விருதை அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி மற்றும்
அதிபர் ஒபாமாவின் மனைவியும் வழங்கினார்.
மாணவியின் சார்பில் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நிரூபமா ராவ்
விருதினை பெற்றுக் கொண்டார். டெல்லி மாணவியை தைரியமான பெண் என குறிப்பிட்ட
ஜான் கெர்ரி, அவருக்காக சிறிது நேரம் மௌன அஞ்சலி செலுத்துமாறு அனைவரையும்
கேட்டுக் கொண்டார்.
மேலும் டெல்லி மாணவி, உயிர்வாழ விரும்பியதையும், தன்னை பாலியல்
வன்கொடுமைக்கு ஆளாக்கியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக
இருந்ததையும் ஜான் கெர்ரி வெகுவாக பாராட்டினார்.
டெல்லி மாணவியின் போராட்ட குணம் லட்சக்கணக்கானவர்களுக்கு விழிப்புணர்வை
ஏற்படுத்தியது என்றும், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வீதியில்
வந்து போராட வைத்தது என்றும் கூறினார்.
மாணவிக்கு நேர்ந்த கொடுமைக்கு நீதி கேட்டு அந்த மாணவியின்
குடும்பத்தினர் நடத்தி வரும் தொடர் போராட்டத்தையும் அமெரிக்க அரசு
புகழ்ந்துள்ளது.
உலக அளவில் மகளிரின் உரிமைகள் மற்றும் அதிகாரத்திற்காக உத்வேகத்துடன்
போராடி வரும் பெண்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு அமெரிக்க அரசு
ஆண்டுதோறும் வீரமங்கை விருது வழங்கி வருகிறது.
0 comments:
Post a Comment